எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 3
** இக் கோப்பில் 6 வது விழா எனக் குறிக்கப்பட்டுள்ளது. எண்ணுடன் சேர்த்துப் படித்தால் ‘ஆறுவது விழா’ என வருகிறது. ஆறுவது சினம் ஆக இருக்கட்டும்; விழாவாக வேண்டா. ஆறாவது விழா என்பதை 6-ஆவது விழா என்றே குறிக்க வேண்டும். ’வது ’ என்னும் சொல் ‘வரன்’ என்பதற்கு எதிர்ச் சொல்லாகும். பெண்ணிற்கு ‘வரன்’ பார்ப்பது போல் பலர் தவறாகப், ‘பையனுக்குப் பெண் பார்ப்பதற்கும்’ ‘வரன்’ பார்க்கிறேன் என்பார்கள்.
‘வது’ என்னும் சொல்லை மறந்ததால்தான் பார்வை மடல்களின் எண்ணிக்கை, ஆண்டு எண்ணிக்கை முதலியன போன்று எண்ணிக்கை வரிசை முறையைக் குறிப்பிடுகையில் எண்ணையும் எழுத்தையும் இணைத்து இவ்வாறு 2- வது ஆண்டு விழா, 3 - வது கூட்டுறவு வார விழா, 10 - வது பொருட்காட்சி, 100 - வது கைத்தறிக் கண்காட்சி
எனத் தவறாகக் குறித்து வருகின்றனர்.
2 ஆவது ஆண்டு விழா,
3 ஆவது கூட்டுறவு வார விழா,
10 ஆவது பொருட்காட்சி,
100 ஆவது கைத்தறிக் கண்காட்சி,
என -ஆவது என்றே குறிக்க வேண்டும். அல்லது எழுத்திலேயே
இரண்டாவது
மூன்றாவது
பத்தாவது
நூறாவது
என்பன போல் குறிக்க வேண்டும்.
மேலும்
10 ஆவதுத் திட்டம், நாற்பதாவதுக் கண்காட்சி , 50 - ஆவதுச் சந்தை
அறுபதாவதுப் பணி மனை
என வல்லெழுத்து இடையில் சேர்க்கப்படுவதும் தவறாகும்.
10 ஆவது திட்டம்
நாற்பதாவது கண்காட்சி
50 ஆவது சந்தை
அறுபதாவது பணிமனை
என்றே எழுத வேண்டும்.
இவ்வறிவுரையில் களப்பணியாளர்கள் பொதுமக்களை சந்திக்க வேண்டும்
எனக் குறிக்கப் பெற்றுள்ளது
பொது மக்களைச் சந்திக்க வேண்டும் என வர வேண்டும்.
இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ ’ அடுத்து வல்லினம் மிக வேண்டும்.
சான்றாக, ‘முதல்வர் ’ என்பதுடன் 2 ஆம்வேற்றுமை உருபான ‘ஐ’ சேரும்பொழுது முதல்வரை என்றாகிறது. முதல்வரை என்னும் சொல்லுக்கு அடுத்து வரும் சொல்லின் முதல் எழுத்து வல்லெழுத்தாக இருந்தால், அதற்குரிய இன மெய்யெழுத்து தோன்றும். க,ச,ட,த,ப,ற, என்னும்வல்லின எழுத்துகளில் ட, ற, ஆகியன சொற்களின் முதலில் வாரா. ஆகவே, க, கா, கி,...என்பனபோல் ‘க’ வரிசை, ‘ச’ வரிசை, ‘த’ வரிசை, ‘ப’ வரிசை ஆகியனதாம் சொல்லின் தொடக்க எழுத்தாக வரும். இவ்வரிசைகளிலும் சில எழுத்துகள் சொற்களின்முதலில் வரா. அவற்றைப் பின்னர்ப் பார்ப்போம். இரண்டாம் வேற்றுமை உருபிற்கு அடுத்து இவ்வல்லின எழுத்துகள் தொடக்கமாக அமைந்தால் உரிய வல்லினத்தின் மெய்யெழுத்து சேர்க்கப்பட வேண்டும்.
அஃதாவது ’க வரிசை வந்தால் ’க்’
ச வரிசை வந்தால் ’ச்’
த வரிசைவந்தால் ’த்’
ப வரிசை வந்தால் ’ப் ’
எனக் கூடுதலாக மெய்யெழுத்தைச் சேர்த்து ஒலிக்க வேண்டும்.
சான்றாக, முதல்வரை என்பதற்கு அடுத்துக் ‘கண்டார்’ என வந்தால்,
‘முதல்வரைக் கண்டார்’ எனவும்,
‘சந்தித்தார்’ என்று வந்தால் ‘முதல்வரைச் சந்தித்தார்’ என்றும்
‘தொடர்ந்தார்’ என வந்தால் ‘முதல்வரைத் தொடர்ந்தார்’ என்றும்
‘ பின்பற்றினார்’ என வந்தால் ‘ முதல்வரைப் பின்பற்றினார்’ என்றும் வரும்.
இங்குள்ள கோப்புகளின் அடிப்படையிலும் பொதுவாக நாம் பயன்படுத்தும் தொடர்களின் அடிப்படையிலும் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம்.
( தொடரும்)
அய்யா இந்த வலைப் பக்கம் கொஞ்சம் வாருங்கள்.
ReplyDeletehttp://thamilamiltham.blogspot.in/2013/05/blog-post_8091.html